ஒரு மனிதன் கீழே விழுந்து கையிலுள்ள எலும்பு முறிந்து விட்டது என்று வைத்து கொள்வோம். அது ஒரு வியாதி அல்ல, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதை அப்படியே விட்டு விட முடியுமா? இல்லை, டாக்டரிடம் போய் எக்ஸ்ரே எடுத்து, கைட்டு போடுவோம். கட்டு போடுவதற்கு முன் கொஞ்சம் அசைந்தாலும் உயிரே போய் விடுவது போல பயங்கர வேதனை ஏற்படும். அதை சரிப்படுத்தினாலொழிய அந்த வேதனை நீங்குவதில்லை. அந்த அளவு நாம் நம் சரீரத்தை நேசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
ஆனால் நம் உடன் சகோதரனோடு உறவு உடைபடும்போது என்ன செய்கிறோம்? இதை குறித்து மற்ற சகோதரனிடம் கேட்டால், என்ன செய்வது, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், பிரச்சனை என் தம்பியிடம் தான் உள்ளது என்பார். தம்பியிடம் கேட்டால், என் அண்ணனிடம் தான் பிரச்சனை உள்ளது என்பார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? உடைபட்ட எலும்பு மறு கை எலும்பை பார்த்து, 'நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அந்த எலும்புதான் உடைந்து விட்டது என்று சொல்வதை போன்று உள்ளது. இந்த இரண்டு எலும்புகளும் என்ன செயய வேண்டும் தெரியுமா? வைத்தியரிடம் சென்று, சரியான சிகிச்சை செய்து கொண்டு, ஓய்வு எடுத்தால் சரியாகி விடும். குணமான உடன் பழைய நிலைக்கு வந்து விட முடியும் என்று விசுவாசித்து, வைத்தியரிடம் சென்று சரி செய்ய வேண்டும். இதை போன்றதுதான் சகோதரனோடுள்ள உறவு முறிவும். ஆனால் இதை சரிசெய்ய வேண்டுமென்று மற்றவர் விரும்புவாரா? நிச்சயமாக இல்லை.
பிரியமானவர்களே, நமது சரீரத்தில் ஒரு முறிவு என்றால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதல்லவா? ஆனால் நமது அண்டை வீட்டாரோடு, சகோதர சகோதரிகளோடு, சக விசுவாசிகளோடு, உறவினரோடு, கணவரோடு, மனைவியோடு உடைவு ஏற்பட்டிருந்தால் அதை குறித்து கவலையற்றிருக்கிறோமே அது எப்படி?
ஆகவே நமது உறவில் யாரோடு முறிவு ஏற்பட்டுள்ளது என்று பார்த்து, விரைவில் ஒன்றுபட முயற்சிப்போம். உடைந்த உறவுகள் சீக்கிரமாய் இணைந்து விடுங்கள் ம்..................
நாம் வாழும் நாட்கள் மிக கொஞ்சமே, நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், யார் மேலும் வஞ்சம் வைத்து கொண்டிருக்காதபடி, உறவுகளை சீர்ப்படுத்துவோம். மன்னித்து மறக்க முயற்சிப்போம். சகோதர உறவுகளில், சக விசுவாசிகளோடுள்ள உறவுகளில், மற்ற எந்த உறவிலும், (தவறான உறவுகள் அல்ல) முறிவு வராதபடி காத்து கொள்வோம்.
இருதயத்திலுள்ள கசப்புகளை அகற்றுவோம். நாம் சில வேளைகளில் குணமடையாமல், வியாதியாக இருப்பதற்கு காரணம், நம் இருதயத்திலுள்ள கசப்புகளாகவும் இருக்கலாம். ஆகவே எந்த கசப்பும் வைக்காதபடி, இருதயத்தை சுத்தமாக்குவோம். மகிழ்வுடன் வாழ்வோம் .................................
No comments:
Post a Comment